சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 அ.தி.மு.க. எம்.பி.க்கள்; எந்தப் பதவியை வகிக்கப்போகிறார்கள்?


சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 அ.தி.மு.க. எம்.பி.க்கள்; எந்தப் பதவியை வகிக்கப்போகிறார்கள்?
x
தினத்தந்தி 2 May 2021 9:31 PM GMT (Updated: 2 May 2021 9:31 PM GMT)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கமும் போட்டியிட்டனர்.

சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கமும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் மாநிலங்களவை எம்.பி.க்களாகவும் இருந்து வருகின்றனர்.

தற்போது கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருந்தால், இவர்கள் இருவருக்கும் அமைச்சர்களாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க நேர்ந்திருப்பதால் இவர்கள் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்களாக தொடர்வார்களா அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி.க்களாக தொடர்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவர்கள் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையிலேயே புதிதாக 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அது அ.தி.மு.க.வுக்கு பாதகமாக அமையும். அதேநேரத்தில் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால், 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாய்ப்பு இருக்கிறது.

Next Story