ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலம்: நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு


ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலம்: நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 Jan 2020 5:32 PM GMT (Updated: 7 Jan 2020 5:32 PM GMT)

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

தெக்ரான்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். 

இந்த நிலையில் ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். 

அவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையில் வந்திருந்தனர். இதனால் டெஹ்ரான் நகரமே கறுப்பு நிறமாக மாறியது போல காட்சியளித்தது. மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். 

இந்த இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  35 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள்  தெரிவிக்கின்றன. 

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story