பாகிஸ்தானில் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் மாயம்


பாகிஸ்தானில் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் மாயம்
x
தினத்தந்தி 15 Jun 2020 7:08 AM GMT (Updated: 15 Jun 2020 11:02 AM GMT)

பாகிஸ்தானில் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் மாயமாகி உள்ளனர்.அவர்களை உளவாளிகளாக சித்தரிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு அழைத்து சென்று இருக்கலாம் என சந்தேகம்.

இஸ்லாமாபாத்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ‘விசா‘ பிரிவில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் உளவு பார்த்ததாககைது செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு நிலைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை இந்தியர் ஒருவரிடம் இருந்து வாங்கியதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்காக அவர்கள் அந்த நபருக்கு இந்திய பணமும், ஒரு ஐபோனும் கொடுத்தனர்.

பிடிபட்டதும் அபித் உசேனும், முகமது தாகிரும் தாங்கள் இருவரும் இந்தியர்கள் என்று கூறி ஆதார் அட்டைகளையும் காட்டினார்கள். ஆனால் அந்த அட்டைகள் போலியானவை என்று தெரியவந்தது.

பின்னர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் உத்தரவின் பேரில் உளவு பார்த்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு பாகிஸ்தான் தூதரகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, உளவு பார்த்த அந்த இரு அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால் தங்கள் தூதரக அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் இந்திய அரசு இப்படி செயல்படுவதாகவும் பாகிஸ்தான் கூறியது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளை அதிகரித்து உள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தபட்டு வருவது தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பியது.

பாகிஸ்தானின் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய  தூதரக அதிகாரிகள் 2 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. 2 பேரையும்  உளவாளிகளாக சித்தரிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளால் அழைத்து செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத்தில்  பணியில் இருந்த  இரண்டு இந்திய ஊழியர்களும் திங்கள்கிழமை காலை சில வேலைகளுக்கு வெளியே சென்று உள்ளனர்.  ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவில்லை அவர்கள் மாயமாகி உள்ளனர். இது குறித்து தூதரக ​​உயர் அதிகாரிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து உள்ளனர் என தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.


Next Story