கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்


கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 7 May 2020 5:09 AM GMT (Updated: 7 May 2020 5:09 AM GMT)

கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்து உள்ளனா்.

வாஷிங்டன்

கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி உலகின் 37.7 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய் பரவி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,391 லிருந்து 52,952 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 லிருந்து 1,783 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் வைரஸில் உள்ள பிறழ்வுகளைப் பார்த்து, விரைவாக பரவுவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

வைரஸ் மாறிக்கொண்டிருக்கிறது, ஆனால் இது மோசமடைந்து வருவதாக அர்த்தமல்ல என்று லண்டன் மரபியல் நிறுவனத்தின் பல்கலைக்கழக கல்லூரி மரபியல் ஆராய்ச்சியாளர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் கூறி உள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று இவ்வளவு வேகமாகப் பரவுவதற்கான காரணம் குறித்து தெரிந்து கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றைப் பரப்பும் கோவிட்-19 வைரஸ் மனித செல்களில் தங்களைப் இணைத்துக் கொண்டு நுழைவதற்குக் காரணமாக அமைந்துள்ள பகுதியை ஆராய்ந்தனா். ஒருவிதமான புரதத்தைப் பயன்படுத்தி, மனித செல்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் அந்த செல்களின் மூலம் செல்களுடன் இணைந்து பரவுகிறது.அத்தகைய புரத்தை உருவாக்க, கொரோனா வைரஸ் 4 அமினோ அமிலங்களை பயன்படுத்துகிறது.

அந்த அமினோ அமிலங்கள், கொரோனா வைரசைப்போல  மற்ற வைரஸ்கள் பயன்படுத்தும் அமிலங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.இந்த விவரங்களை பகுப்பாய்வு செய்ததில், கடந்த 2002-03-ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் வைரஸ்,ஹெச்கோவ்-ஹெச்கேயூ1 என்ற வைரஸ் ஆகிய இரண்டின் தன்மைகளையும் கொரோனா வைரஸ் கொண்டுள்ளது.

இதில் சார்ஸ் வைரஸ் மிகத் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லாவிட்டாலும், மனிதா்களின் உடலில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. ‘ஹெச்கோவ்-ஹெச்கேயூ1’ வைரஸ் மனித உடலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதி வேகத்தில் பரவும் திறன் கொண்டது.இந்த இரு வைரஸ்ளையும் கொண்டதாக இருப்பதாலேயே கொரோனா நோய்த்தொற்று மிக வேகத்தில் பரவி, அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரிய வந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோன நோய் பாதிக்கபட்டவர்களின் ரத்த குழாய்கள் இரண்டு விதமாகப் பாதிக்கப்படுகின்றன. முதலாவது, உடலில் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் அதிக செயல்பாட்டால் சைட்டோகைன் ஸ்டார்ம் உருவாகிறது. அப்போது நோய்ப் பாதுகாப்பு தர வேண்டிய சைட்டோகைன் புரதங்கள் கிருமிகளை அழிப்பதோடு, போகிற போக்கில் ரத்தக் குழாய்களையும் சேதப்படுத்தி விடுகின்றன.

இந்த வைரஸ்கள் சுவாசப் பாதையில் மேல் அடுக்கு செல்கள்வழியாக உடலுக்குள் புகுந்து நோயை உருவாக்குகின்றன என்பது ஆரம்பக்கட்ட தகவல். புதிய தகவல் என்னவென்றால், இவை உள்ளடுக்கு  செல்களையும் துளைத்துக் கொண்டு உடலுக்குள் செல்லும் என்பதுதான். அதிலும் குறிப்பாக, ரத்தக் குழாய் உள்ளடுக்கு செல்களை கொரோனா வைரஸ்கள் தாக்கும் போது அங்கே அழற்சி வீக்கம்  உண்டாகிறது. போகப் போக விரிசலும் விழுகிறது.

உடலில் எந்த இடத்திலாவது ரத்தக் குழாயில் விரிசல் விழுந்தால் ரத்தத்தில் உள்ள தட்டணுவுக்குத் தகவல் போகும். தட்டணுவும் பைப்ரின் பசையால் ஒரு வலையைப் பின்னி, ரத்தக் குழாய் விரிசலை அடைத்துவிடும். இந்த அற்புதம் உடலின் வெளிப்பக்க ரத்தக் கசிவுக்கு நடந்தால் நல்லது; உள்பக்கத்தில் நடந்தால் அது ஆபத்து.

எப்படியென்றால், விரிசலில் விரிக்கப்பட்டிருக்கும் பைப்ரின் வலையில் தட்டணுக்கள், கொழுப்பு செல்கள் எல்லாமே கும்பலாகச் சிக்கிக் கொண்டு ரத்தப் பந்து ஆகிவிடும்.  இந்தச் செயல்பாட்டை உள்கட்ட ரத்த உறைவு  என்கிறோம். இப்படி உருவான ரத்தப் பந்துக்குப் பெயர் ரத்த உறைவுக் கட்டி. இது ரத்த நதிக்கு வேண்டாத சங்கதி. இது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். அல்லது ரத்த நதியில் உருண்டோடி வேறு இடத்தில் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். எந்த இடத்தில் ரத்தத்தைத் தடுக்கிறதோ அந்த இடத்தைப் பொறுத்து ஆபத்து அமையும்.

கொரோனா பாதித்த நுரையீரல் ரத்தக் குழாய்களில் முதல்கட்ட வீக்கம் உண்டாகும் போது, அவற்றால் சரியாகச் சுருங்கவும் முடியாது; விரியவும் முடியாது. அதனால் ரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்காது. காற்றுப் பைகளில் ஆக்ஸிஜன் -கார்பன்-டை-ஆக்ஸைடு பரிமாற்றம் போதுமான அளவுக்கு இருக்காது. இதன்விளைவாகத்தான் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இது நுரையீரலுக்கு விழும் முதல் அடி.

அடுத்து, காற்றுப் பைகளுக்கான ரத்தக் குழாய்கள் மீன் வலைபோல் பின்னப்பட்டிருக்கும். மிக நுண்ணிய வலைப் பின்னலில் ரத்தம் உறைவது எளிது. அப்போதெல்லாம் காற்றுப் பைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிடும். ஆக்ஸிஜனுக்கு அங்கே வழியில்லாமல் போகும். மேலும், ரத்தப் பந்தானது நுரையீரலின் பிரதான ரத்தக் குழாயை அடைத்து விடுவதால்  மொத்த ரத்த ஓட்டமும் நின்று விடும். இதனால் திடீர் மரணம் ஏற்படும்.

 கொரோனா பாதிப்பால் உண்டாகும் ரத்தக் கட்டியானது இதயத்தில் கரோனரி ரத்தக் குழாய்களில் ஏற்படுமானால், அது மாரடைப்பு. அதுபோன்றே மூளை ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்படுகிறது என்றால், அது பக்கவாதம் . வழக்கமாக, ரத்தக்கொதிப்பு, இதயநோய், நீரிழிவு, கொலஸ்டிரால் கூடுதல் எனத் துணை நோய் ஏதாவது இருந்தால், அவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவது  தவிர்க்கமுடியாதது. ஆனால், நியூயார்க்கில் பக்கவாதமும் மாரடைப்பும் வந்து இறந்த போன கொரோனா நோயாளிகள் பலருக்கும் வயது30-ல் இருந்து 40-க்குள்தான். இவர்களுக்கு மற்ற துணை நோய்களும் இல்லை. இவர்களின் இறப்பு முழுக்கமுழுக்க ரத்தக் கட்டிகளால் ஏற்பட்டவையே.

மருத்துவ நடைமுறையில் இம்மாதிரியான ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கு ஹெப்பாரின், டிபிஏ போன்ற மருந்துகளைச்செலுத்துவதுண்டு. என்ன சிக்கல் என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநேக இடங்களில் ரத்தக் கட்டிகள் இருப்பதால் மருந்தின் அளவை பல மடங்கு கூட்ட வேண்டியிருக்கிறது. அப்போது அதன் எதிர்விளைவாக மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உயிராபத்தை அதிகப்படுத்திவிடுகிறது.

இந்த புதிய ஆபத்தைத் தவிர்க்கவும் வழி இருக்கிறது. உங்களுக்கு ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற துணை நோய்கள் இருந்தால் சரியாக சிகிச்சை பெறுங்கள். புகைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு துரித உணவுகளை ஓரங்கட்டுங்கள். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள். நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நடைப்பயிற்சி செய்யுங்கள். 

Next Story