படைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு


படைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 May 2020 12:15 AM GMT (Updated: 27 May 2020 11:12 PM GMT)

இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

வாஷிங்டன்,

இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சாலை அமைப்பது, ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்துவது போன்ற பணிகளை சீனா ஏற்கனவே செய்து முடித்து உள்ளது.

இதேபோல் இந்தியாவும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய தனது பகுதிக்குள் சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறது. இதை சீனா விரும்பவில்லை. எல்லையில் இந்திய ராணுவத்தின் பலம் அதிகரிப்பதை தனக்கு ஆபத்து என்று அந்த நாடு கருதுகிறது.

இதனால் லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் எல்லைப்பகுதியில் சீன ராணுவ வீரர்கள், அவ்வப்போது நமது வீரர்களுடன் மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபடுகிறார்கள். கடந்த 5-ந் தேதி கிழக்கு லடாக்கில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து லடாக் எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது. பங்காங் சோ ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் திபெத் பகுதியில் உள்ள தனது விமானதளத்தை சீனா விரிவாக்கம் செய்து, அங்கு போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது. அவை சீன விமானப்படையின் ஜே-11 அல்லது ஜே-16 ரக போர் விமானங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதேபோல் இந்தியாவும் எல்லையில் தனது படை பலத்தை அதிகரித்து வருகிறது.

சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் லடாக் பிராந்தியத்தில் எல்லை பகுதியில் சாலை அமைப்பது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது என்று இந்தியா முடிவு செய்து உள்ளது. அந்த பணிகளை செய்து முடித்தால் எல்லை பகுதியில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் விரைவாக அனுப்பி வைக்கமுடியும்.

இந்தியா மீது சீனா ஆத்திரம் கொள்வதற்கு இதுதான் முக்கிய காரணம் ஆகும். இந்தியா மேற்கொள்ளும் கட்டமைப்பு பணிகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில்தான் சீன வீரர்கள் அவ்வப்போது நமது வீரர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார்கள்.

லடாக் எல்லை நிலவரம் குறித்து முப்படைகளிள் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, சீனாவுக்கு இணையாக படைகளை குவிப்பது என்றும், சாலை கட்டுமான பணியை தொடர்ந்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் எல்லையில் நிலவும் பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தணிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே தலைமையில் ராணுவ அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் சீனா, பாகிஸ்தான் நாடுகளுடனான எல்லையில் நிலவும் சவால்கள், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் கொள்கைகள் பற்றி ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் இருப்பது போல் அரசியல் சாசனம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று பரவலும், உம்பன் புயலால் பெரும் பாதிப்புகளும், இந்திய-சீன எல்லையில் பதற்றமும் ஏற்பட்டு இருக்கும் நிலையில் நிபுணர்கள் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சினை எழுந்து இருப்பதால் சமரசம் செய்து அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாடுகளுக்கு தெரிவித்து இருக்கிறோம்“ என்று கூறி இருக்கிறார்.

ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், இந்தியா திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் அவர் இப்போது இவ்வாறு கூறி இருக்கிறார்.

Next Story