கொரோனா பாதிப்பு தரவுகளை மீண்டும் வெளியிட்ட பிரேசில்


கொரோனா பாதிப்பு தரவுகளை மீண்டும் வெளியிட்ட பிரேசில்
x
தினத்தந்தி 10 Jun 2020 10:14 PM GMT (Updated: 10 Jun 2020 10:14 PM GMT)

பிரேசிலில் கொரோனா பாதிப்பு தரவுகள் இணையதளங்களில் மீண்டும் வெளியிடப்பட்டது.

* அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் போலீஸ் பிடியில் கொல்லப்பட்ட கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டின் இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் ஹூஸ்டன் நகரில் நடந்தது. ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அவரது உடல் ஹூஸ்டனுக்கு தெற்கே உள்ள பியர்லேண்டில் அவரது தாயார் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

* பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இது குறித்த முழு தரவுகளையும் வெளியிட்டு வந்த இணைய தளத்தை அந்த நாட்டு அரசு முடக்கியது. இது அங்கு கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முழு தரவுகளையும் வெளியிடும் இணையதளத்தை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை பிரேசில் அரசு சில மணி நேரங்களிலேயே நடைமுறைப்படுத்தி உள்ளது.

* ஆப்கானிஸ்தானில் லோகார் மாகாணத்தில் முன்னாள் செனட் உறுப்பினர் வாலி அகமது ஜாய் என்பவரை தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்று விட்டனர். அவர், இறந்துபோன தனது சகோதரியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச்சென்றிருந்தபோது இந்த கொடுஞ்செயல் நடந்துள்ளது. இதேபோன்று தாய்கொண்டி மாகாணத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

* கொரோனா வைரஸ் பரவலால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிப்பதில் உள்ள ஆபத்தை கருத்தில் கொள்ளுமாறு சீனா, தனது நாட்டு மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல், ஆசியர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றை ஆபத்தாக சீனா பார்க்கிறது.


Next Story