அஜர்பைஜான், ஆர்மேனியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது


அஜர்பைஜான், ஆர்மேனியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 10 Oct 2020 10:30 PM GMT (Updated: 10 Oct 2020 8:29 PM GMT)

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது.

மாஸ்கோ, 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது. நீண்டகால இந்த எல்லைப் பிரச்சினை கடந்த மாத இறுதியில் ஆயுத மோதலாக உருவெடுத்தது. நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் அப்பாவி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இருநாடுகள் இடையிலான இந்த மோதல் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சமாதான முயற்சியை முன்னெடுத்தன.

அதன்படி ரஷிய அதிபர் புதினின் அழைப்பின் பேரில் அந்த நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ரஷியா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

சர்ச்சைக்குரிய பகுதியில் கிடக்கும் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது மற்றும் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் மேலும் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

Next Story