இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது


இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது
x
தினத்தந்தி 2 Jun 2021 4:22 AM GMT (Updated: 2 Jun 2021 4:22 AM GMT)

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது.

ஜெனீவா,

கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

இது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் நேற்று முன்தினம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “இன்று கொரோனா வைரஸ்- உருமாறிய கவலைக்குரிய கொரோனா வைரஸ்களை எளிதாக குறிப்பிட வசதியாக புதிய லேபிள்களை (பெயர்கள்) உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. அவை தற்போதைய அறிவியல் பெயர்களுக்கு மாற்று கிடையாது. பொது விவாதத்துக்கு உதவும் வகையில்தான் இந்த பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என கூறி உள்ளார்.

* இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரசுக்கு பெயர் ஆல்பா.

* தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரசுக்கு பீட்டா என்று பெயர்.

* பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரசுக்கு கமா என்றும், ‘பி.2 ’வைரசுக்கு ஜீட்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரசஸ்களுக்கு பெயர் எப்சிலான் மற்றும் அயோட்டா ஆகும்.

இவ்வாறு உலக சுகாதார நிறுவனம், பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

Next Story