பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு


பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு
x
தினத்தந்தி 27 Sep 2021 9:38 AM GMT (Updated: 27 Sep 2021 9:38 AM GMT)

பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் சிலை ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டு உள்ளது.

குவாடர்,

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோரம் குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை ஒன்று உள்ளது.  இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தோன்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டவர் ஜின்னா.

அவரது சிலையை சில மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்து உள்ளனர்.  இதில், அந்த சிலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது.  இதற்கு பலூச் விடுதலை முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

பலூசிஸ்தானில் பல ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  கடந்த வாரம், பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.  2 பேர் காயமடைந்தனர்.



Next Story