மலேசியாவில் கொட்டித்தீர்த்த கனமழை: பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு


மலேசியாவில் கொட்டித்தீர்த்த கனமழை: பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 Dec 2021 7:13 PM GMT (Updated: 25 Dec 2021 7:22 PM GMT)

மலேசியாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

கொலாம்பூர்,

தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த வாரம் முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை பருமழை பெய்யும் காலம் என்றாலும் இந்த ஆண்டு மலேசியாவில் வரலாறு காணாத அளவில் கன மழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது கொட்டிய கனமழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெனிசுலா மலேசியா மாகாணத்தின் பஹங், சிலங்கர் ஆகிய 2 நகரங்கள் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. 

கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் இருந்த 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வரலாறு காணாத அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. மாயமான 5 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

Next Story