அதிபருடன் கருத்து வேறுபாடு சோமாலியா பிரதமர் பதவி நீக்கம்


அதிபருடன் கருத்து வேறுபாடு சோமாலியா பிரதமர் பதவி நீக்கம்
x
தினத்தந்தி 27 Dec 2021 9:11 PM GMT (Updated: 27 Dec 2021 9:13 PM GMT)

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் முகமது பர்மாஜோ.


மொகாதிசு, 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் முகமது பர்மாஜோ. இவரின் பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தனது பதவி காலத்தை அவர் நீட்டித்து கொண்டார்.

இந்த விவகாரத்தில் அவருக்கும் பிரதமர் முகமது உசேன் ரோபலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக அங்கு கடந்த மாதம் நடக்க இருந்த பொதுத்தேர்தல் தள்ளிப்போனது.

இதனால் அங்கு அரசியல் குளறுபடி உருவான சூழலில் பிரதமர் ரோபல், கடற்படைக்கு சொந்தமான நிலத்தை தனது தனிப்பட்ட நலனுக்காக அபகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ரோபல் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் ரோபல் மீதான ஊழல் குற்றச்சாட்டை காரணம் காட்டி அதிபர் பர்மாஜோ நேற்று அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த ஊழல் தொடர்பாக சோமாலியா கடற்படை தளபதியையும் அவர் பதவியில் இருந்து நீக்கினார். ஊழல் குற்றச்சாட்டில் பிரதமரை அதிபர் பதவி நீக்கம் செய்தது சோமாலியா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Next Story