ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு வழக்கு: இலங்கையின் உயர் அதிகாரிகள் இருவர் விடுதலை

இலங்கையின் உயர் அதிகாரிகள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்துள்ள ஐகோர்ட்டு, இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21-ந் தேதி 3 தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் நடத்திய இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், 11 இந்தியர்கள் உள்பட சுமார் 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்த இலங்கை போலீசார், இது தொடர்பாக ஏராளமானோரை கைது செய்து விசாரித்தனர். அத்துடன் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை தகவல் கிடைத்தும் அலட்சியமாக இருந்ததாக அப்போதைய காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ஜாமீனில் விடுதலை ஆன அவர்கள் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கொழும்பு ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் தற்போது ஜெயசுந்தரா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்துள்ள ஐகோர்ட்டு, இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.
Related Tags :
Next Story