நிலைமை மோசமடையலாம்; பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைய குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

உக்ரைனில் முன்னெச்சரிக்கை இன்றி நிலைமை மோசமடையலாம் என்றும் அருகேயுள்ள பாதுகாப்பு முகாம்களில் குடிமக்கள் தஞ்சமடையும்படியும் அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
கீவ்,
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.
இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. தொடர்ந்து இன்று 3வது நாளாக போர் நீடிக்கிறது.
இரு தரப்பிலும், போரை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வீரர்களின் உயிரிழப்பு பற்றியும் தகவல் வெளிவருகின்றன. ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
2வது நாள் போரில், ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டன. ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷியா 3வது நாளான இன்று தெரிவித்து உள்ளது. எனினும், உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷிய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் பதிலுக்கு இன்று அறிவித்து உள்ளது. ஆனால், ரஷிய வீரர்கள் உயிரிழப்புபற்றி ரஷிய ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.
ரஷிய படைகள் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன. அந்த நகரின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைனில் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது.
உக்ரைனில் முன்னெச்சரிக்கை இன்றி நிலைமை மோசமடையலாம். அதனால், அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு அருகேயுள்ள பாதுகாப்பு முகாம்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story