உக்ரைன்: ஜபோரிஜியாவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 23 பேர் பலி


உக்ரைன்: ஜபோரிஜியாவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 23 பேர் பலி
x

தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 மாதங்களாக ரஷியா போர் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது. கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் மாநில இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க நான் உத்தரவிடுகிறேன், என்று அதிபர் புதின் ஆணையில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஜபோரிஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் காயமடைந்துள்ளதாக ஜபோரிஜியா பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் சென்றவர்கள் ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தங்கள் உறவினர்களை பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என அவர் தெரிவித்தார்.


Next Story