ஜார்ஜியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 8 பேர் சாவு


ஜார்ஜியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 8 பேர் சாவு
x

ஜார்ஜியாவில் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்ஜியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குடெவ்ரி நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பாராகிளைடிங் பயிற்சிக்காக சிறிய விமானத்தில் புறப்பட்டு சென்றார். விமானத்தில் அவரும், விமானி ஒருவரும் இருந்தனர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் அங்குள்ள ஒரு பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து நொறுங்கியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஜார்ஜியா எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து விபத்துக்குள்ளான அதே இடத்தில் ஹெலிகாப்டரும் விழுந்து நொறுங்கியது.

இதை தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றொரு ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள், மீட்பு குழுவை சேர்ந்த 2 பேர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் 2 பேர் என 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே போல் விமானம் விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி பலியானார். விமானி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்பு குழுவினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


Next Story