அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்: "நீதி வழங்கப்பட்டுள்ளது" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்: நீதி வழங்கப்பட்டுள்ளது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x

அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில் மீண்டும் தலை தூக்க தொடங்கினர். தற்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். நீதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்" என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story