கம்போடியா: ஹோட்டலில் திடீர் தீ விபத்து;16 பேர் பலி


கம்போடியா: ஹோட்டலில் திடீர் தீ விபத்து;16 பேர் பலி
x

தாய்லாந்தின் எல்லையில் உள்ள கம்போடிய ஹோட்டல்-சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்போடியா:

கம்போடியா நாட்டில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர். நேற்றிரவு 11.30 மணி அளவில் ஓட்டலின் ஒரு அறையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டல் அறைக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். என்றாலும் சில அறைகளில் சிக்கி கொண்டவர்கள் தீயில் கருகி மயங்கி விழுந்தனர்.

இதில் 16 பேர் பலியாகி விட்டதாக தெரியவந்துள்ளது. பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் 400 நபர்கள் அந்த சூதாட்ட விடுதியில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிராண்ட் டயமண்ட் சிட்டி தாய்லாந்து-கம்போடியா எல்லையில் உள்ள பிரபல சூதாட்ட விடுதிகளில் முக்கியமானதாகும்.


Next Story