இந்திய வம்சாவளியினர், குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களை பணியமர்த்த கூடாது! இன்போசிஸ் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு


இந்திய வம்சாவளியினர், குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களை பணியமர்த்த கூடாது! இன்போசிஸ் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு
x

வயது, பாலினம் மற்றும் தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக இன்போசிஸ் மீது குற்றம் சாட்டினார்.

நியூயார்க்,

பெங்களூரை சேர்ந்த பன்னாட்டு ஐடி நிறுவனமான இன்போசிஸ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவன முன்னாள் நிர்வாகி ஒருவர், இன்போசிஸ் நிறுவனம் அதன் பணியமர்த்தல் செயல்பாட்டில் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

இன்போசிஸ் நிறுவன ஆட்சேர்ப்பு பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் ஜில் ப்ரீஜீன் அளித்துள்ள புகாரில், வயது, பாலினம் மற்றும் தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக இன்போசிஸ் மீது குற்றம் சாட்டினார்.

நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு எதிராகவும், நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு எதிராகவும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து ஜில் ப்ரீஜீன் கூறுகையில், "இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள சட்டவிரோத பாரபட்சமான கலாச்சாரத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், குழந்தைகளை பெற்றெடுத்து கொண்ட பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

2018இல், வேலையில் சேர்ந்த முதல் இரண்டு மாதங்களில் இந்த கலாச்சாரத்தை மாற்ற முயற்சித்தேன். ஆனால் அப்போது இன்போசிஸ் நிர்வாகிகளான ஜெர்ரி கர்ட்ஸ் மற்றும் டான் ஆல்பிரைட் ஆகியோரின் எதிர்ப்பை சந்தித்தேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இன்போசிஸ் நிறுவனம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மூத்த நிர்வாகிகளை பணியமர்த்துவதில் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்காததால் ஜில் ப்ரீஜீன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், பிரீஜீன் இன்போசிஸ் மீது முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இன்போசிஸ் நிறுவனம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்ய கோர்ட்டு நிராகரித்து விட்டது. மேலும், 21 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.


Next Story