நடிகை ஆலியாவின் பாலியல் தொழிலாளி காட்சியை பயன்படுத்திய உணவு விடுதிக்கு கண்டனம்


நடிகை ஆலியாவின் பாலியல் தொழிலாளி காட்சியை பயன்படுத்திய உணவு விடுதிக்கு கண்டனம்
x

பாகிஸ்தானில் உணவு விடுதியில் பாலியல் தொழிலாளியாக நடிகை ஆலியா பட் நடித்த காட்சியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



கராச்சி,



பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஸ்விங்ஸ் என்ற உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை புதிய முறையில் ஈர்க்க, பாலியல் தொழிலாளியாக கங்குபாய் என்ற இந்தி படத்தில் நடிகை ஆலியா பட் நடித்த காட்சியை பயன்படுத்த முடிவு செய்தது.

அந்த காட்சியில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட ஆலியா பட், பெண் என்ற முறையில் தனக்கான உரிமைகளை பெற போராடுவார். ஆனால், கட்டாயப்படுத்தப்பட்டு அந்த தொழிலுக்கு சென்ற பின்பு, முதன்முறையாக வாடிக்கையாளரை கவர்வதற்காக வசனம் பேசுவார்.

அதில், இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்? என அவர் பேசும் வசனங்களை பயன்படுத்தி, உணவு விடுதியானது வாடிக்கையாளரை கவர முயன்றது. ஸ்விங்சில் ஆடவர்களுக்கு திங்கட் கிழமை 25 சதவீதம் தள்ளுபடி உண்டு. உடனடியாக வாருங்கள் என தெரிவித்து இருந்தது.

ஆனால், இந்த முயற்சி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்வினை ஆற்றியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். என்ன இது? பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் செயலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை நகைக்கும் வகையிலும் உள்ளது.

வாடிக்கையாளரை கவர்வதற்கான மார்க்கெட் தந்திரம் இது என நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அது தவறு. பிரபலமடைய வேண்டும் என்பதற்காக நீங்கள் எந்த அளவுக்கு கீழ் தரத்திற்கு செல்கிறீர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, பாலியல் தொழிலை அடிப்படையாக கொண்ட படத்தின் காட்சிகளை பயன்படுத்துகிறீர்கள் என சாடியுள்ளனர். இதற்காக உணவு விடுதி அரைமனதுடன் மன்னிப்பு கோரியுள்ளது.


Next Story