மளிகை பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள் போடுவோம்.. கனடா பிரதமர் எச்சரிக்கை


மளிகை பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள் போடுவோம்.. கனடா பிரதமர் எச்சரிக்கை
x

உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு காரணிகள், உற்பத்தி மற்றும் சப்ளை செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது பொதுவான பணவீக்க விகிதமான 3.3 சதவிகிதத்தை விட அதிகமாகும். இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், மளிகைக் கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்படி, வால்மார்ட், காஸ்ட்கோ உள்ளிட்ட 5 பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களிடம் கேட்க உள்ளேன். அவர்களின் திட்டம் நடுத்தர மக்களுக்கும், அதில் சேர கடினமாக உழைக்கும் மக்களுக்கும் உண்மையான நிவாரணம் வழங்கவில்லை என்றால், நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுப்போம். வரி விதிப்பு உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம்.

இதுதவிர, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் தடுமாறும் நிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை வரி தள்ளுபடி செய்யப்படும்.

மக்கள் பலர் கஷ்டப்படும் நேரத்தில், சூப்பர் மார்க்கெட்டுகள் லாபம் ஈட்டி சாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பெரிய மளிகை சங்கிலிகள் சாதனை லாபம் ஈட்டுகின்றன. குடும்பங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களின் முதுகில் ஏறி இந்த லாபம் சம்பாதிக்கக்கூடாது.

இவ்வாறு ஜஸ்டின் ட்ருடோ பேசினார்.

உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு காரணிகள், உற்பத்தி மற்றும் சப்ளை செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து வசூலிக்கும் கார்பன் வரியை தற்காலிகமாக நீக்குவது, மளிகை கடைக்காரர்களுக்கு ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் செலவை அதிகரிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் இலக்குகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளால், உணவுப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்க முடியும் என கனடாவின் சில்லறை விற்பனை கவுன்சில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story