டெங்கு பாதிப்பு; சிறப்பு கொசுக்கள் உற்பத்தியை விரைவுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு


டெங்கு பாதிப்பு; சிறப்பு கொசுக்கள் உற்பத்தியை விரைவுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு
x

சிங்கப்பூரில் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சிறப்பு கொசுக்கள் உற்பத்தியை ஆய்வகத்தில் விரைவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.



சிங்கப்பூர்,



சிங்கப்பூரில் நடப்பு ஆண்டில் 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த மார்ச்சில் இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அந்நாட்டில் ஜூன் முதல் அக்டோபர் வரையில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்படும். ஆனால், அதற்கு முன்பே இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு அரசை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

இந்நிலையில், டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய கொசுக்களை அழிக்க ஒல்பேச்சியா என்ற திட்டம் ஒன்றை விரைவுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி கிரேஸ் ஃபூ கூறும்போது, தொடக்கத்தில் ஒவ்வொரு வாரமும் 20 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படும். அதன்பின்னர், வாரத்திற்கு 50 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் என இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறினார்.

அந்த கொசுக்களிடம் ஒல்பேச்சியா என்ற பாக்டீரியா காணப்படும். இந்த பாக்டீரியாவை சுமந்து கொண்டு செல்லும் கொசுக்கள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, அவற்றின் முட்டைகள் குஞ்சு பொறிக்காது. அதனால், கொசுக்களும் உற்பத்தியாகாது.

டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில், இயற்கையாக உருவான கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த சிறப்பு கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.


Next Story