உகாண்டாவில் எபோலா நோய் பரவல் அதிகரிப்பு - அண்டை நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


உகாண்டாவில் எபோலா நோய் பரவல் அதிகரிப்பு - அண்டை நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x

உகாண்டாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சூடானில் 5 பேருக்கு எபோலா நோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கம்பாலா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்தது. உகாண்டாவில் இதற்கு முன் கடந்த 2000 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் எபோலா பரவல் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது அங்கு மீண்டும் எபோலா நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போது உகாண்டாவில் எபோலா பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நபர்களுக்கு, எபோலா வைரசின் 6 வகைகளில் ஒன்றான 'சூடான் வகை எபோலா' தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா வைரசுக்கு எதிராக பயன்படுத்தப்படும் 'எர்பெவோ' தடுப்பூசியை சூடான் வகை எபோலாவிற்கு பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உகாண்டாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சூடானில் எபோலா நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு இதுவரை 5 பேருக்கு எபோலா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போல் உகாண்டாவின் மற்றொரு அண்டை நாடான காங்கோவின் எல்லை பகுதிகளில், சிலருக்கு எபோலா நோய் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து அண்டை நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்த காங்கோ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story