ஆப்கானிஸ்தான்: போராட்டம் நடத்திய பெண்கள் மீது தலீபான்கள் தாக்குதல்- ஐரோப்பிய ஒன்றியம் சாடல்


ஆப்கானிஸ்தான்: போராட்டம் நடத்திய பெண்கள் மீது தலீபான்கள் தாக்குதல்- ஐரோப்பிய ஒன்றியம் சாடல்
x

Image courtesy: AFP

தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காபூல்,

தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அங்கு அமலில் உள்ளன. உயர்கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலீபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது.

நேற்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களை தலீபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று தாக்கினர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தலீபான்களை ஐரோப்பிய ஒன்றியம் சாடியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் கல்வி போன்ற அடிப்படை சேவைகளுக்கான அணுகல் முறையாக மறுக்கப்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.

நாட்டின் ஆட்சியில் பொருளாதார, சமூக, கலாச்சார, அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துதல், சர்வதேச ஒப்பந்தங்கள் போன்றவற்றை ஆப்கானிஸ்தான் கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story