ரஷியாவில் இருந்து வெளியேறும் மக்கள்! பின்லாந்து எல்லைக்குள் நுழைய ரஷிய பயணிகளுக்கு தடை!


ரஷியாவில் இருந்து வெளியேறும் மக்கள்! பின்லாந்து எல்லைக்குள் நுழைய ரஷிய பயணிகளுக்கு தடை!
x

Image Credit:Reuters

தினத்தந்தி 29 Sep 2022 12:15 PM GMT (Updated: 29 Sep 2022 12:15 PM GMT)

பின்லாந்துக்கு சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷிய நாட்டவர்கள் அதிகமானோர் செல்லத் தொடங்கியுள்ளனர்.

ஹெல்சின்கி,

உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் விளாடிமிர் புதினின் அறிவிப்புக்கு எதிராக, ரஷியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.ரஷியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படும் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரஷியாவின் அண்டை நாடுகளான போலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷிய நாட்டவர்கள் அதிகமானோர் செல்லத் தொடங்கியுள்ளனர். நிலைமை தீவிரமடைவதை கருத்தில் கொண்டு, இன்று நள்ளிரவு முதல் ரஷிய சுற்றுலாப் பயணிகள் பின்லாந்துக்குள் நுழைய அனுமதியில்லை என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.

ரஷியாவுடனான தங்கள் நாட்டின் எல்லையை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பின்லாந்து வெளியுறவு மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இந்த முடிவு தற்போதைய நிலைமையில், ரஷியாவில் இருந்து பின்லாந்துக்கு படையெடுக்கும் மக்களை முற்றிலுமாகத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும், குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வருபவர்கள், மற்றும் வேலை மற்றும் படிப்புக விஷயங்களுக்காக வருபவர்கள் பின்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

ரஷிய ராணுவத்திற்கான அணிதிரட்டல் உத்தரவு, இப்போது பின்லாந்து அரசு எடுத்துள்ள முடிவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.


Next Story