பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டம்: இந்திய குழுவினர் கோத்தபய ராஜபக்சேவுடன் சந்திப்பு


பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டம்: இந்திய குழுவினர் கோத்தபய ராஜபக்சேவுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 24 Jun 2022 12:24 AM GMT (Updated: 24 Jun 2022 12:32 AM GMT)

தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது.

கொழும்பு,

இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேசினர்.

தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது.இதனால் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது.

பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவியை வழங்கியுள்ள இந்தியா, உணவுப்பொருட்கள், எரிபொருட்கள், மருந்துகள் என நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறது. இந்தியாவின் இந்த உதவி நடவடிக்கைகளில் தமிழகமும் இணைந்திருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய உயர்மட்டக்குழு ஒன்று நேற்று கொழும்பு சென்றது.

மத்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்த குழுவில், நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், வெளியுறவுத்துறையின் இந்தியப்பெருங்கடல் பிராந்திய இணை செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் கொழும்புவில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து நாட்டின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவரிடம், இந்த சிக்கலான சூழலில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு ஒரு நெருங்கிய நண்பனாக முழு ஆதரவையும் இந்தியா வழங்கும் என குவாத்ரா உறுதியளித்தார்.

குறிப்பாக முதலீடுகளை அதிகரித்தல், இணைப்பு மற்றும் பொருளாதார இணைப்பை வலுப்படுத்துதல் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு இந்தியா உதவும் என எடுத்துரைத்தார்.

முன்னதாக, எரிபொருள், மருந்துகள், உரம் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களாக ஏற்கனவே இந்தியா வழங்கி இருக்கும் உதவிகள் குறித்து ஆய்வு செய்த இந்த குழுவினர், மேலும் உதவிகளை வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அறிவித்தனர்.

பின்னர் இந்த குழுவினர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து நாட்டின் பொருளாதார நெருக்கடி, உணவு-அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு குறித்தும், இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

இந்த சந்திப்புகள் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனதுடுவிட்டர் தளத்தில், 'இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் உதவிகள் குறித்து அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமருடன் இந்திய குழுவினர் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தினர்' என குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே இலங்கைக்கு சர்வதேச உதவிகளை மேலும் பெறும் வகையில் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை நடத்த உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்து உள்ளார்.

வரலாற்று நட்பு நாடுகளாக இருந்து வரும் இந்த நாடுகளின் ஆதரவு தங்களுக்கு தேவை எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


Next Story