இந்தோனேசியா: பயணிகள் படகில் தீ விபத்து - 14 பேர் பலி


இந்தோனேசியா: பயணிகள் படகில் தீ விபத்து - 14 பேர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2022 5:21 PM GMT (Updated: 24 Oct 2022 8:31 PM GMT)

இந்தோனேஷியாவில் பயணிகள் படகு தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியா நாடு ஏராளமான தீவுகளைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டின் கிழக்கு நுஷா தெங்காரா பகுதிக்கு உட்பட்ட குபங்க் தீவில் இருந்து கலபாஹி தீவுக்கு நேற்று காலையில் ஒரு 230 பயணிகளுடன் ஒரு கப்பல் புறப்பட்டது.

அந்த கப்பலில் மாலுமிகளுடன் சேர்த்து மொத்தம் 240 பேர் இருந்தனர். அந்த கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கப்பலில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவி எரிந்தது.

இதனால் மாலுமிகள் உடனடியாக இதுபற்றி பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மீட்பு கப்பலில் விரைந்து வந்து தீவிபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்த பயணிகளை மீட்டனர். ஆனால் இதில் 14 பயணிகள் தீயில் உடல் கருகி பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story