என்கிட்ட வச்சுக்காதே... மலைக்க வைக்கும் எறும்புகளை பற்றிய சுவாரசிய தகவல்கள்


என்கிட்ட வச்சுக்காதே... மலைக்க வைக்கும் எறும்புகளை பற்றிய சுவாரசிய தகவல்கள்
x

சூழலியல் சமநிலை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எறும்புகள் பூமி முழுவதும் ஒரு மனிதருக்கு 285 கோடி என்ற விகிதத்தில் வாழ்கின்றன என சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.



நியூயார்க்,


எறும்புகள் உருவத்தில் மிக சிறியவையாக காணப்படுகின்றன. ஆனால், அதன் பணியோ அசாத்தியம் நிறைந்தது. சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவை எறும்புகள். தனது எடையை விட பல மடங்கு கொண்ட இரை அல்லது உணவை தூக்கி செல்ல கூடிய ஆற்றல் படைத்தவை.

பொதுவாக ஒரு குழுவாகவே இவை வாழ்கின்றன. இவற்றில் ராணி எறும்புகளுக்கு என்று தனி மதிப்பு இருக்கும். எனினும், ஒரு குழுவில் ஒரு ராணி எறும்பே இருக்கும். அதனை சுற்றியே வேலைக்கார எறும்புகள் பணிவிடை செய்யும். எறும்புகளுக்கு கேட்பதற்கு காதுகள் இல்லை. என்றபோதிலும், அதிர்வுகளை கொண்டு அவை புரிந்து செயலாற்றுகின்றன.

ஒரு வகை எறும்புகளுக்கு இறக்கைகள் இருக்கும். சில வகை எறும்புகளை நம்மூரில் சாமி எறும்புகள் என்றும் கூறுகிறோம். ஏனெனில் அவை நம்மை கடிப்பதில்லை. ஒருவேளை அவை கடித்தபோதும், வலியும் ஏற்படுவதில்லை.

அவை நம்மேல் ஊர்ந்து சென்றாலும், கூச்சம் மட்டுமே ஏற்படும். நமக்கு சுகம் தரும் எல்லாவற்றையும், தேவைக்கு ஏற்றாற்போன்று பெயரிட்டு அழைத்து கொள்கின்றோம். ஆனால், சில எறும்புகள் கடிக்கும்போது, தேள் கொட்டியது போன்ற வலி கூட ஏற்படும்.

அமேசான் போன்ற வன பகுதியில் வசிக்கும் ஒரு வகை எறும்புகள் துப்பாக்கி தோட்டா தாக்கியது போன்ற வலியை ஏற்படுத்தும். எறும்பு குடும்பத்தில் மிக பெரிய உருவம் கொண்ட, ஓர் அங்குலத்திற்கும் கூடுதலான நீளமுள்ள இந்த எறும்புகள் கடித்த பின் ஏற்படும் வலி 24 மணிநேரம் வரை கூட நீடிக்கும்.




சகாரா பாலைவனத்தில் வசிக்க கூடிய சகாரன் சில்வர் எனப்படும் எறும்புகள் மிக விரைவாக நடந்து செல்ல கூடியவை. இந்த எறும்பு இனம் வினாடிக்கு 90 செ.மீ. தொலைவை கடந்து சென்று விடும். அப்படியென்றால், மனிதன் ஒரு மணிநேரத்திற்கு 400 மைல்கள் தொலைவை கடந்து செல்வதற்கு இணையான வேகத்துடன் அவை கடந்து செல்ல கூடியவை என அறியப்பட்டு உள்ளது.

பூமியில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் மொத்த எடையானது, அனைத்து மனிதர்களின் மொத்த எடையை விட அதிக அளவில் இருக்கும் என்று நீண்டகால கணிப்பொன்று இருந்து வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பூமி முழுவதும் 20 குவாட்ரில்லியன் (1 குவாட்ரில்லியன் என்பது 10ன் அடுக்கு 15க்கு சமம்) எறும்புகள் ஊர்ந்து செல்கின்றன என மதிப்பீடு செய்துள்ளனர்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள எறும்புகளின் அடர்த்தியை அளவிட்டு 489 ஆய்வுகளில் இருந்து கிடைத்த தரவுகளின் தொகுப்பினை கொண்டு இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் தேசிய அறிவியல் அகாடெமியில் வெளியிடப்பட்டு உள்ளன.

உலகிலுள்ள எறும்புகளின் ஒட்டுமொத்த கார்பன் எடையளவு 12 மில்லியன் டன்கள் (1 டன் என்பது ஆயிரம் கிலோ) என கணக்கிடப்பட்டு உள்ளது. இவற்றுடன் ஒப்பிடும்போது, மனிதர்களின் மொத்த மக்கள் தொகை 700 கோடியாக உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மனிதருக்கும் பூமியில் 285 கோடி எறும்புகள் என்ற விகிதத்தில் அவை உள்ளன.

இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான எறும்புகள் நம்மிடையே இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், சுற்றுச்சூழலுக்கு அவை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.




இந்த எறும்பு இனங்கள் 10 கோடிக்கும் கூடுதலான ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் 12 ஆயிரம் எறும்பு இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

எறும்புகள் மண்ணில் காற்று உட்புகுவதற்கான பணியை செய்வதில் முக்கிய பணியாற்றுகிறது. இதனால் நீர் மற்றும் பிராணவாயு ஆகியவை செடி, கொடிகளின் வேர்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

இந்த எறும்புகள் விதைகளை மண்ணுக்கு அடியில் எடுத்து செல்லும். பின்பு, அவற்றின் மேற்புறத்தில் உள்ள எலையோசோம் எனப்படும் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பகுதியை உணவாக உட்கொண்டு விடுகிறது.

இதனால், அந்த பகுதியில் இருந்து செடிகள் எளிதில் வெளிவந்து வளர்வதற்கு உதவியாக அமைகிறது. செடிகள் இயற்கையாகவே, முளைத்து வெளிவரும் என்றபோதிலும், சில விதைகளில் கடினம் நிறைந்த சதைப்பற்று பகுதிகளை எறும்புகள் உண்டபின்னர், அவை சுலபத்தில் வெளிவருகிறது.

சூழலியல் சமநிலையை எடுத்து கொண்டால், அவற்றை பராமரிப்பதில் எறும்புகளின் பங்கு மகத்துவம் வாய்ந்தது. பல கரிம சேர்ம பொருட்களை எறும்புகள் பரவலாக உட்கொள்கின்றன. இதனால், அவை பல வெவ்வேறு உயிரினங்களுக்கு உணவை வழங்குகின்றன.


Next Story