அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு; கனடா விவகாரம் பற்றி ஆலோசனையா?


அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு; கனடா விவகாரம் பற்றி ஆலோசனையா?
x
தினத்தந்தி 28 Sep 2023 5:55 AM GMT (Updated: 28 Sep 2023 8:46 AM GMT)

அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசுகிறார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பில் கனடாவில் இந்த ஆண்டு ஜூனில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

இதுபற்றி, அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, இரு தலைவர்கள் இடையேயான விவாதம் பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது என மறுத்து விட்டார்.

எனினும், இந்த விவகாரம் பற்றி நாங்கள் முன்பே தெளிவுப்படுத்தி விட்டோம். நிஜ்ஜார் படுகொலை சம்பவத்தில் கனடாவின் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என்று உறுதிப்பட கூறினார்.

ஆனால், இந்தியாவுக்கு எதிராக கனடா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, நியூயார்க்கில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த வெளியுறவுக்கான கவுன்சிலில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியா அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்றும் அது தங்களுடைய நாட்டின் கொள்கையல்ல என்றும் கூறினார்.

கனடாவின் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என மறுத்ததுடன், நிஜ்ஜார் படுகொலையில் குறிப்பிட்ட தகவலை வழங்கினால், அதுபற்றி இந்தியா விசாரணை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.


Next Story