கிரீஸில் மீண்டும் பிரதமராகிறார் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்..!


கிரீஸில் மீண்டும் பிரதமராகிறார் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்..!
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM GMT (Updated: 26 Jun 2023 3:57 AM GMT)

கிரீஸில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

ஏதென்ஸ்,

ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கடந்த மே 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற 300 தொகுதிகளை கொண்ட அந்த நாட்டில் 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கடந்த 5 வாரங்களில் இரண்டாவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் புதிய ஜனநாயக கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில் 158 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரீஸில் இடண்டாவது முறையாக கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமர் ஆகிறார். இந்த வெற்றியை கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். அப்போது தொண்டர்களை சந்தித்த பிரதமர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Next Story