விமானத்தில் சென்றபோது ரத்தம் கக்கி இறந்த நபர்... பயத்தில் அலறிய சக பயணிகள்


விமானத்தில் சென்றபோது ரத்தம் கக்கி இறந்த நபர்... பயத்தில் அலறிய சக பயணிகள்
x

விமானத்தில் ஏறும்போதே அந்த பயணியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக மற்றொரு பயணி கூறியுள்ளார்.

பாங்காக்:

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையாக மூச்சு வாங்கியது. சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. பின்னர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி கதறி அழுதார். சக பயணிகளும் பயத்தில் அலறினர்.

விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த டாக்டர் ஆகியோர் இணைந்து அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சுவாசத்தை மீட்பதற்காக சி.பி.ஆர். நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டது. தீவிர முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மனைவியின் கண் முன்னே அந்த பயணி பரிதாபமாக உயிரிழந்தார். பயணி உயிரிழந்ததை பைலட் அறிவித்தபோது விமானம் நிசப்தமாக இருந்தது.

இறந்தவரின் உடல் விமானத்தின் கேலரிக்குள் வைக்கப்பட்டு, விமானம் தாய்லாந்துக்கு திருப்பிவிடப்பட்டது. நேற்று காலையில் தாய்லாந்தில் விமானம் தரையிறங்கியதும், உரிய நடைமுறைகளுக்கு பிறகு, அவரது உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமானத்தில் நடந்த இந்த மரணம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என பயணிகள் சிலர் கூறியுள்ளனர்.

அந்த பயணி விமானத்தில் ஏறும்போதே அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, குளிரிலும் அவருக்கு வியர்த்து கொட்டியது, வேகமாக மூச்சு விட்டார் என கரின் மிஸ்பீல்டர் என்ற பயணி கூறியுள்ளார். அவரது நிலை இவ்வளவு மோசமாக இருந்தும் விமானி ஏன் விமானத்தை கிளப்பினார்? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story