5 நாட்களில் பெரிய டுவிஸ்ட்.. மீண்டும் ஓபன்ஏஐ தலைமை பொறுப்புக்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்


5 நாட்களில் பெரிய டுவிஸ்ட்.. மீண்டும் ஓபன்ஏஐ தலைமை பொறுப்புக்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்
x

மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

சான் பிரான்சிஸ்கோ:

பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டார். திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டிருந்தது. அத்துடன், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

"ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் நேர்மையாக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிட்டது.

ஒபன்ஏஐ நிர்வாக குழுவின் இந்த முடிவு தொழில்நுட்ப உலகை அதிர்ச்சி அடைய செய்தது. தொழில்நுட்ப நிறுவனங்களின் முன்னணி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். எனினும் ஆல்ட்மேன் பணிநிக்க விஷயத்தில் நிர்வாக குழு உறுதியாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார். இதுதவிர ஒபன்ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு நெருங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் நிர்வாக குழுவின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

அதில், சாம் ஆல்ட்மேனின் பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால், அனைவரும் சாம் ஆல்ட்மேனுடன் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்து கையொப்பமிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க நிர்வாக குழு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் திரும்புவதற்கான ஒப்பந்தத்தை எட்டியிருப்பதாக ஓபன்ஏஐ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது. அதன்பின்னர் சாம் ஆல்ட்மேனும் தனது வருகையை உறுதி செய்தார்.

"ஐ லவ் ஓபன்ஏஐ. இந்த குழு மற்றும் அதன் குறிக்கோளை ஒன்றாக வைத்துக் கொள்ள கடந்த சில நாட்களில் அனைத்தையும் செய்தேன். புதிய நிர்வாக குழு மற்றும் சத்யாவின் ஆதரவுடன், நான் ஒபன்ஏஐ-க்கு திரும்ப ஆவலாக இருக்கிறேன். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வலுவான பார்ட்னர்ஷிப் உருவாக்க விரும்புகிறேன்" என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story