ஹைதியில் கூலிப்படையை சேர்ந்த 13 பேரை தீ வைத்து எரித்துக்கொன்ற பொதுமக்கள்


ஹைதியில் கூலிப்படையை சேர்ந்த 13 பேரை தீ வைத்து எரித்துக்கொன்ற பொதுமக்கள்
x

Image Courtesy: AFP

ஹைதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீ வைத்து எரித்துக்கொன்றர்.

கரீபியன் தீவு நாடான ஹைதியின் அதிபராக இருந்து வந்த ஜோவெனல் மோசை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் கூலிப்படை கும்பல் ஒன்று வீடு புகுந்து சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்துக்கு பின் அந்த நாட்டில் கூலிப்படை கும்பல்களின் கை ஓங்க தொடங்கின. குறிப்பாக தலைநகர் போர்ட் அவ் பிரின்சின் 60 சதவீத பகுதிகளை கூலிப்படை கும்பல்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

கூலிப்படை கும்பல்கள் தங்கள் பிராந்திய கட்டுப்பாட்டை விரிவுபடுத்த போலீசாருடன் போட்டி குழுக்களுடன் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் போர்ட் அவ் பிரின்சில் நடந்த கூலிப்படை கும்பல்களுக்கு இடையிலான மோதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் முன்தினம் போர்ட் அவ் பிரின்சில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்த பொதுமக்கள் பெட்ரோலில் ஊறவைக்கப்பட்ட டயர்களால் அவர்களை சரமாரியாக தாக்கினர். அதன்பின்னர் அவர்களின் உடலில் தீ வைத்தனர். இதில் 13 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story