நெதன்யாகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


நெதன்யாகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x
தினத்தந்தி 13 Dec 2023 7:31 PM GMT (Updated: 14 Dec 2023 6:58 AM GMT)

இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

காசா,

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1-ந்தேதி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து காசாவை இஸ்ரேல் மீண்டும் முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார். இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story