அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க இன்று உலக தேனீக்கள் தினம் அனுசரிப்பு


அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க இன்று உலக தேனீக்கள் தினம் அனுசரிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 May 2022 4:54 AM GMT (Updated: 20 May 2022 5:08 AM GMT)

ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க இன்று உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று அழிந்து வரும் தேனீக்களை பாதுகாக்க இன்று உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சுறுச்சுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் தேனீக்கள் இயற்கையை சமநிலையாக வைத்துக்கொள்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை உற்பத்தி செய்யும் தேனானது பல விதங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனீக்கள் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும்.

ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட உதவுவதோடு, அது மருத்துவ பொருளாகவும் திகழ்கிறது.

தேனீக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்ரன் ஜான்ஸாவின் பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. இந்த சர்வதேச நாளின் நோக்கமாகச் சுற்றுச்சூழலுக்குத் தேனீக்களின் பங்களிப்பினைப் பாராட்டுவதோடு மகரந்தச் சேர்க்கையில் பங்கை தேனீக்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதாகும்

வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அதன் வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியதுவத்தை உணர்த்துங்கள். இதனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் இதைக் கற்றுக்கொண்டு வளர்க்க , பாதுகாக்க முன்வருவார்கள்.

பூச்சிக்கொல்லிகளால் நீங்கள் அழிக்க நினைக்கும் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறையை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு , சோப், சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.

பல இடங்களில் தேனீக்கள் கூடு கட்ட அதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தருகின்றார்கள். அப்படி நீங்களும் தேனீக்கள் சூழ உதவுங்கள். இதற்காக உலகம் முழுவதும் பல அமைப்புகள், குழுக்கள் இருக்கின்றன. நீங்களும் குழு அமைத்து தேனீக்களை பாதுகாக்கலாம். அதனால் நன்மையும் அடையலாம்.


Next Story