சைப்ரஸ் நாட்டின் அடுத்த அதிபராக நிகோஸ் தேர்வு


சைப்ரஸ் நாட்டின் அடுத்த அதிபராக நிகோஸ் தேர்வு
x

சைப்ரஸ் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் வெற்றி பெற்று உள்ளார்.



நிக்கோசியா,


சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது.

இந்த தேர்தலில், 49 வயதுடைய முன்னாள் வெளியுறவு மந்திரியான நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் 51.9 சதவீத வாக்குகளை பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட 66 வயது கொண்ட ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிசுக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்தன. சைப்ரசில் விலைவாசி உயர்வு, முறையற்ற புலம்பெயர்வு ஆகியன தேர்தலில் எதிரொலித்து உள்ளது.

சைப்ரசில் கிரேக்கம் பேச கூடிய தெற்கு பகுதி மற்றும் துருக்கியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு பகுதியில் அரை நூற்றாண்டாக காணப்படும் பிரிவினையும் தேர்தலில் எதிரொலித்து உள்ளது.

இதன்படி, கிரேக்க நாட்டு ஆதரவிலான ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர், 1974-ம் ஆண்டு முதல் சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியை துருக்கி படைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால், சைப்ரஸ் மற்றும் துருக்கி இடையே நீண்டகாலம் ஆக இந்த விவகாரம் தொடர்ந்து நிலவி வருகிறது.

சைப்ரஸ் விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாததற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தேர்தலில் தோல்வியடைந்த மேவ்ராய்யன்னிஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.


Next Story