நிதிஷ் குமார் விவகாரம்; தைரியமுள்ள பெண் தேர்தலில் நிற்க வேண்டும்: அமெரிக்க நடிகை


நிதிஷ் குமார் விவகாரம்; தைரியமுள்ள பெண் தேர்தலில் நிற்க வேண்டும்:  அமெரிக்க நடிகை
x

பீகார் முதல்-மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நம்புகிறேன் என்று அமெரிக்க நடிகை தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்

பீகார் சட்டசபையில், பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று முன்தினம் பேசும்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விசயங்களை குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர், குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி அவையில் பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற ஒரு பெண், தன்னுடைய கணவரிடம் கூறி, உறுதி செய்து கொள்வார் என்றார்.

இதனை விவரித்து பேசும்போது, கைகளை அசைத்து, அதற்கான செய்கைகளை வெளிப்படுத்தியதுடன், மிகைப்படுத்தியும் பேசினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. அவையில், அவரது பேச்சை கேட்டு கொண்டிருந்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற உறுப்பினர்கள் இடையே சிரிப்பொலி எழுந்தது. இதற்கு பா.ஜ.க. சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அவருடைய இந்த பேச்சுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. எம்.எல்.சி. நிவேதிதா சிங், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஜாத் பூனாவல்லா, மற்றொரு தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சு வர்மா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ் குமார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, பீகார் சட்டசபை நேற்று கூடியதும், நிதிஷ் குமாருக்கு எதிராக அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியும், கண்டன வாசகங்களை கொண்ட காகிதங்களை ஏந்தியபடியும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, எனது பேச்சுகளை திரும்ப பெற்று கொள்கிறேன் என நிதிஷ் குமார் கூறினார். இதேபோன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது பேச்சுகளை திரும்ப பெற்று கொள்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில, இதுபற்றி ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை மற்றும் பாடகியான மேரி மில்பென் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், நிதிஷ் குமார் பேசிய பேச்சுகளை தொடர்ந்து, பீகார் முதல்-மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நான் நம்புகிறேன். நான் ஓர் இந்திய குடிமகளாக இருந்திருப்பேன் என்றால், பீகாருக்கு சென்று, முதல்-மந்திரிக்கான தேர்தலில் போட்டியிடுவேன்.

பீகாரை வழிநடத்த பெண் ஒருவருக்கு பா.ஜ.க. அதிகாரமளிக்க வேண்டும். அதுவே பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சிக்கான உண்மையான உணர்வாக இருக்கும். அல்லது பீகாரில், ஜவானில் ஷாருக்கான் செய்தது போன்று, ஓட்டளித்து மாற்றம் கொண்டு வரவேண்டும் என பதிவிட்டு உள்ளார்.

மத்திய பிரதேசத்தில், தேர்தல் பேரணி ஒன்றில் நேற்று பேசிய பிரதமர் மோடி, நிதிஷ் குமாரின் பெயரை குறிப்பிடாமல், அவரை கடுமையாக சாடி பேசினார். இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி அமெரிக்க பாடகி ஒருவர் விமர்சனம் வெளியிட்டு இருப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


Next Story