ஒடிசா ரெயில் விபத்து - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்..!


ஒடிசா ரெயில் விபத்து - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்..!
x

ஒடிசா ரெயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். " ஒடிசா ரெயில் விபத்து செய்தியை அறிந்ததும் இதயமே நொறுங்கிவிட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். இந்த வருத்தமான சூழ்நிலையில் இந்தியர்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்பதாக" ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


Next Story