அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்


அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்
x
தினத்தந்தி 24 Jun 2022 10:19 PM GMT (Updated: 24 Jun 2022 10:20 PM GMT)

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்களின் எதிரொலியாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,


அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் நியூயார்க் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேரும், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் 18 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேரும் கொல்லப்பட்ட கொடூர சம்பவங்கள் அந்த நாட்டை உலுக்கின.

இந்த சம்பவங்களை தொடர்ந்து துப்பாக்கி வினியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

ஜனாதிபதி ஜோ பைடனும் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது, மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா மீது நடந்த ஓட்டெடுப்பில், 65 ஓட்டுகளுடன் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படும்.

அங்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பின்னர் அது ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் அந்த மசோதாவில் கையெழுத்திட்டதும் அது சட்டமாக அமலுக்கு வரும். இந்த மசோதா சட்டமானால் அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மிகவும் முக்கியமான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story