ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை
x

22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அவர் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மாஸ்கோ,

பிரதமர் மோடி, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் முதலில் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். பிற்பகலில் ரஷியா போய்ச் சேர்ந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷியாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் வந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாஸ்கோவில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காகவே பிரதமர் மோடி சென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அவர் அங்கு சென்றுள்ளார். ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவர் செல்வதும் இதுவே முதல்முறை ஆகும்.பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தார்.

இதைத்தொடர்ந்து, இன்றைய உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியும், புதினும் சந்திக்கிறார்கள். முதலில், இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பிறகு, பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து பேசுவார்கள்.இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.ராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், மக்களிடையிலான உறவு ஆகியவற்றில் இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேசுகிறார்கள்.ரஷியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். அதிபரின் கிரெம்ளின் மாளிகையில், போர் வீரர் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று ரஷியாவில் இருந்து ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லனை சந்திக்கிறார். பிரதமர் கர்ல் நெஹம்மருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கும் இந்திய வம்சாவளியினரை அழைத்து உரையாடுகிறார்.

ரஷியா புறப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ரஷியாவுடனான சிறப்பு உறவு, கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும் என் நண்பர் புதினுடன் ஆய்வு செய்ய ஆவலாக இருக்கிறேன். அமைதியான, நிலையான பிராந்தியத்துக்கு ஆதரவாக செயல்பட இந்தியா உறுதி பூண்டுள்ளது. இந்த பயணம், இந்திய வம்சாவளியினரை சந்திக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும். ஆஸ்திரியா நாடு, இந்தியாவின் நிலையான, நம்பகமான கூட்டாளி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story