இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தொடக்கம்: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்


இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தொடக்கம்: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
x

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சமீபத்தில் தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக மலையக தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் இலங்கை தேசிய சமூகத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெறும் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அனைத்து சிலோன் ஜாமியத்துல் உலமாவின் 100-வது நினைவு தின கொண்டாட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:

நமது பெரும்பான்மையான நேரத்தை நமக்குள்ளே அடித்துக்கொண்ட நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். இது நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்வதற்கான காலம் என நான் நினைக்கிறேன்.எனவே இது தொடர்பாக தமிழர்கள், இலங்கை தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். அவர்களது பிரச்சினைகள், நல்லிணக்கத்துக்கான வழிகள் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளோம்.

இலங்கை தமிழர்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது.இதைப்போல முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பேச வேண்டும். இதற்கு ஒரு உதாரணம், 2018-ம் ஆண்டு திகமா கலவரம் என நினைக்கிறேன். நாம் அது குறித்து பேச வேண்டும். அத்துடன் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகள் குறித்தும் பேச வேண்டும்.

மேலும் சிங்கள சமூகத்தினருடனும் நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சில சிங்கள சமூகங்கள் சாதிய பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டு உள்ளன, ஏனெனில் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால்தான் நான் சமூக நீதி ஆணையத்தை நிறுவ விரும்புகிறேன். இது இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும்.

75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், ஒரு தேசமாக பலமாக இருப்போம். சமூக நீதி வெல்லட்டும். இன நல்லிணக்கம் நிலவட்டும். மேலும் ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். இது நம்மை மிகவும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரமாக இருக்க உதவும். இது நம்மை செழிப்பாக மாற்றும்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.


Next Story