ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்: இந்தியா சார்பில் ஜனாதிபதி முர்மு அஞ்சலி


ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்: இந்தியா சார்பில் ஜனாதிபதி முர்மு அஞ்சலி
x

ராணி எலிசபெத் உடல் அடக்கம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி லண்டன் நகரில் உலக தலைவர்கள் குவிந்து உள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்து, உலகையே கவர்ந்தவர் இரண்டாம் எலிசபெத்.

ராணி எலிசபெத் மரணம்

இவர், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் விடுமுறையை கழித்து வந்த நிலையில், கடந்த 8-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96. ராணியின் திடீர் மரணம், அந்த நாட்டு மக்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராணியின் மறைவையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் (73) அந்த நாட்டின் மன்னர் ஆனார்.

ராணிக்கு அஞ்சலி

ராணியின் உடல் பால்மோரல் கோட்டையில் இருந்து, ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், லண்டன் எடுத்துசெல்லப்பட்டது. அங்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டு அரச குடும்பத்தினரும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 14-ந் தேதி மாலை முதல் ராணியின் உடல் அடங் கிய சவப்பெட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதன் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு தொடர்ந்து 4 நாட்கள் பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வந்து, கடும் குளிரிலும் இரவு பகலாக வரிசையில் காத்து நின்று, ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

வெஸ்ட்மின்ஸ்டர்மண்டபத்தையொட்டி அமைந்துள்ள லேன்காஸ்டர் இல்லத்தில் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பதற்கான நோட்டு புத்தகம் வைக்கப்பட்டு, அதில் தலைவர்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வருகின்றனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

ராணியின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளுமாறு உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 500 தலைவர்களுக்கும், மிக முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இறுதிச்சடங்கையொட்டி முக்கிய இடங்களில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இறுதிச்சடங்குக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் லண்டன் நகரில் நேற்று முன்தினம் முதல் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் நேற்று வரவேற்பு அளித்தார். அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். முன்னதாக அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணிக்கு இந்தியாவின் சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை 6.30 மணிக்கு ராணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிவுக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு தொடர்பான சடங்குகள் தொடங்குகின்றன.

இறுதிச்சடங்கு

இன்று காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட 500 உலக தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிற அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

அப்போது டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. ஹீத்ரோ விமான நிலையம் விமானங்களை இயக்காது. விமான சத்தத்தால், இறுதிச்சடங்குகளுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

57 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் அரசு மரியாதையுடன் நடைபெறுகிற இறுதிச்சடங்கு இதுதான். கடைசியாக 1965-ம் ஆண்டு, போர்க்கால பிரதமராக விளங்கி மறைந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச்சடங்கு நடந்தது நினைவுகூரத்தக்கது.

11 மணிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு முடிந்ததும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

உடல் நல்லடக்கம்

அதைத்தொடர்ந்து ராணி எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச்செல்லப்படுகிறது. அதனுடன் மன்னர் சார்லசும், இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் செல்கிறார்கள்.

தொடர்ந்து ராணியின் உடல், விண்ட்சார் கோட்டைக்கு அருகே உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி 'ராயல் வால்ட்' என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும்.

இறுதியில், அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க பிரார்த்தனை, மன்னர் 6-ம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடக்கிறது. அதன் பின்னர் ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு

ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி இங்கிலாந்து முழுவதும் உள்ள பூங்காக்கள், சதுக்கங்கள், திரையரங்குகளில் பெரிய திரைகளில் நேரடியாக காட்டப்படுகிறது.

இதையொட்டி 10 லட்சம் பேர் லண்டன் மாநகரில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு சுமார் 250 ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மத்திய லண்டன் நகரில் உள்ள பல சாலைகள் மூடப்படுகின்றன. மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏதுவாக மத்திய லண்டனில் 20 மைல் தொலைவுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் லண்டன், பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Next Story