புதினை விமர்சித்த ரஷிய கோடீசுவரர் ஆன்டோவ் உள்காயம் ஏற்பட்டு மரணம்; பிரேத பரிசோதனை அறிக்கை


புதினை விமர்சித்த ரஷிய கோடீசுவரர் ஆன்டோவ் உள்காயம் ஏற்பட்டு மரணம்; பிரேத பரிசோதனை அறிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2022 11:26 AM GMT (Updated: 28 Dec 2022 11:52 AM GMT)

ரஷிய அதிபர் புதினை விமர்சித்த கோடீசுவரர் ஆன்டோவ் உள்காயம் ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.

மாஸ்கோ,

ரஷியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசாவுக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் ஒன்றாக தங்கியிருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மொத்தம் 4 பேர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஓட்டலின் 3-வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தகவல் அறிந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபற்றி ஆன்டோவ் மரண வழக்கை விசாரித்து வரும் போலீஸ் சூப்பிரெண்டு விவேகானந்தா சர்மா கூறும்போது, பாவெல் கடந்த ஞாயிற்று கிழமை (டிசம்பர் 25-ந்தேதி) மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அவரது உடலை கடந்த திங்கட் கிழமை தகனம் செய்து விட்டோம் என கூறியுள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்துள்ள ரஷிய நாடாளுமன்ற துணை சபாநாயகரான வியாசெஸ்லாவ் கார்துகின் மற்றும் ரஷிய சட்டசபை சபாநாயகர் விளாடிமிர் கிசெலியோவ் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.

ஆன்டோவின் சக கட்சி உறுப்பினரான விளாடிமிர் புடானோவ் (வயது 61) என்பவர் அதே ராயகடா ஓட்டலில் மரணம் அடைந்த 3 நாட்களுக்குள் பாவெல்லும் மரணம் அடைந்து உள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பினை அடுத்து, ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர்களில் ஆன்டோவும் ஒருவர் ஆவார். எனினும், அந்த வாட்ஸ்அப் தகவல் உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், ஆன்டோவ் மரணம் பற்றிய பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், உள்காயம் ஏற்பட்டதில் ஆன்டோவ் மரணம் உடைந்து உள்ளார் என அதற்கான காரணம் தெரிவிக்கின்றது.

அவரது நண்பரான விளாடிமிர் புடானோவ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார் என்றும் மற்றொரு பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.

சக நண்பர் மரணம் அடைந்ததில் அதிர்ச்சி அடைந்து ஆன்டோவ் தற்கொலை செய்து கொண்டார் என ஒருபுறம் கூறப்படுகிறது. எனினும், அது தள்ளி விடப்பட்டு ஒன்றாக இருக்க கூடும் என்றும் மற்றொரு புறம் கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்காக அவர்கள் தங்கியிருந்த ராயகடா ஓட்டலுக்கு, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் செல்ல இருக்கின்றனர். ரஷிய சுற்றுலாவாசிகளான இவர்களுடன் தம்பதியான மிகாயில் துரோவ் மற்றும் நடாலியா பனசெங்கோ என்ற தம்பதியும் தங்கி இருந்துள்ளது. அவர்கள் இருவரும், வேறொரு அறையில் தனியாக தங்கியிருந்து உள்ளனர்.


Next Story