ரஷிய அதிபர் தேர்தல்; வாக்குரிமையை உணர்ந்து செயல்பட வேண்டும்: புதின் உரை


ரஷிய அதிபர் தேர்தல்; வாக்குரிமையை உணர்ந்து செயல்பட வேண்டும்:  புதின் உரை
x

ரஷிய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் முன்பே வாக்குப்பதிவு நடந்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள் வாக்களித்து இருக்கின்றனர்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ராணுவ செலவினங்களும் அதிகரித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், ரஷியாவில் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையிலான நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, ரஷியர்கள் தேர்தலில் பங்கேற்க வரும்படி ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலையடுத்து, புதின் உரையாற்றும்போது, நம்முடைய ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கான நம்முடைய தீர்மானம் ஆகியவற்றை நாம் உறுதி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

ஒவ்வொரு வாக்கும் பயனளிக்கும். அதனாலேயே, வருகிற 3 நாட்களில் உங்களுக்கான வாக்குரிமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என நான் அழைக்கிறேன் என பேசியுள்ளார்.

இதேபோன்று, ரஷிய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் முன்பே வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதன்படி, 40 ஆயிரம் பேர் வாக்களித்து உள்ளனர். ரஷிய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா இதுபற்றி கூறும்போது, 23 நாடுகளில் முன்பே வாக்கு பதிவானது நடந்து விட்டது.

29 தேர்தல் ஆணையாளர்கள் அதனை மேற்பார்வை செய்து வருகின்றனர். 12-ந்தேதி வரையிலான நாட்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள் வாக்களித்து இருக்கின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் வாக்கு பதிவு நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்த தேர்தலில், 5-வது முறையாக புதின் வெற்றி பெற்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷியாவின் தலைவராக 3 தசாப்தங்களுக்கும் கூடுதலாக நீடிப்பார் என்றும் பரவலாக பார்க்கப்படுகிறது. ரஷிய அரசியல் சாசன திருத்தங்களுக்கு பின்னர், புதின் 2036-ம் ஆண்டு வரை அரசியலில் அதிகாரத்தில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.


Next Story