சோமாலியாவில் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு


சோமாலியாவில் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
x

சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

இந்தநிலையில், சோமாலியா தலைநகா் மொகடிஷுவில் உள்ள பிரபலமான விடுதிக்குள் நுழைந்து, அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினா்.40 பேர் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்நாட்டு காவல் துறையினா் கூறியதாவது:

மொகடிஷுவில் உள்ள விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். மேலும் பெண்கள், குழந்தைகள் என பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனா். இதையடுத்து, அவா்களை மீட்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா். அப்போது, இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது. 24 மணி நேரத்துக்கும் மேலாக இந்த துப்பாக்கிச் சண்டை தொடா்ந்தது.

இதில் 20 பேர் பலியாகினா். 40-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தங்கும் விடுதிக்குள் நுழைவதற்கு முன்பாக அப்பகுதியில் 2 காா் குண்டுவெடிப்புகளையும் பயங்கரவாதிகள் நடத்தினர். இத்தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பயங்கராவாதிகள் தாக்கிய சொகுசு விடுதி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் அதிகம் பயன்படுத்தப்படுவதாகும் என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனர்.


Next Story