இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கினார்


இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கினார்
x

உக்கிரமடைந்த போராட்டம்: இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.

இந்த நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிவருகின்றனர். இதில் ஏராளமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர்.

அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஒடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் நடைபெற்று வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கலைக்கழகங்கள் மாணவர் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.


Next Story