இலங்கை நாடாளுமன்றத்தில் ஜூலை 20ந்தேதி புதிய அதிபர் தேர்வு; சபாநாயகர் அறிவிப்பு


இலங்கை நாடாளுமன்றத்தில் ஜூலை 20ந்தேதி புதிய அதிபர் தேர்வு; சபாநாயகர் அறிவிப்பு
x

இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற ஜூலை 20ந்தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.



கொழும்பு,



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார்.

கோத்தபயா தப்பியோடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தியும், உணவு உண்டு, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும் வந்தனர். இது தொடர்புடைய வீடியோக்களும் வெளிவந்தன.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே 13ந்தேதி (இன்று) ராஜினாமா செய்வார் என நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா சில தினங்களுக்கு முன் கூறினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவது பற்றி பிரதமர் ஊடக பிரிவு கூறும்போது, சர்வ கட்சி அரசு அமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற பின்பு விக்ரமசிங்கே பதவி விலகுவார் என தெரிவித்தது. அதுவரை விக்ரமசிங்கே பிரதமராக நீடித்திடுவார் என்றும் தெரிவித்தது.

கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதிபர் கோத்தபயா இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

இதற்கிடையில் இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தகவல் வெளியானது. ஜூலை 13ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளார் என கூறப்பட்டது.

இலங்கையின் முன்னாள் நிதி மந்திரியான பசில் ராஜபக்சே, அந்நாட்டில் இருந்து தப்பி துபாய்க்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக புறப்பட்ட அவரை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பி இலங்கையிலேயே தங்கினார்.

இந்த சூழலில், கோத்தபய ராஜபக்சே விமானத்தில் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி, பாதுகாவலர் ஒருவர் என மொத்தம் 4 பயணிகளுடன் இன்று அதிகாலையில் அண்டை நாடான மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டார். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆன்டனோவ்-32 ரக விமானத்தில் அவர்கள் அனைவரும் பயணித்து உள்ளனர்.

விமான படையின் சிறப்பு விமானத்தில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களது பாஸ்போர்ட்டுகளில் சீல் வைக்கப்பட்டு உள்ளன என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத குடியுரிமை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதன்படி, மாலத்தீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்தில் கோத்தபயாவின் விமானம் சென்று சேரும் என கூறப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்தா யாப்பா அபயவர்தனா தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், அதிபர் ராஜபக்சே, தான் நாட்டில் இல்லாத சூழலில், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ஜனாதிபதி பொறுப்புக்கு நியமனம் செய்துள்ளேன் என்று என்னிடம் கூறினார் என பேசியுள்ளார்.

இலங்கையில் அதிபர், பிரதமர் என இரண்டு பேரும் பதவியை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்து வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் மேற்கூறியவாறு பேசியுள்ளார்.

இந்த சூழலில், சபாநாயகர் யாப்பா பேசும்போது, இலங்கை அதிபர் தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைக்கிறேன் என என்னிடம் கூறினார். இதனை அடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற ஜூலை 20ந்தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என அறிவித்து உள்ளார்.


Next Story