ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டும் - தலீபான்கள் கூட்டத்தில் முடிவு


ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டும் - தலீபான்கள் கூட்டத்தில் முடிவு
x

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான் பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலீபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது.

தலைநகர் காபூலில் நடைபெற்ற இஸ்லாமிய மதகுருக்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆப்கானிஸ்தானின் மூத்த மத தலைவர் மவுலாவி ஹெபதுலா அகுந்த்ஸாதா,

"சுதந்திரமாக இல்லாமல் வளர்ச்சியடைய முடியாது. கடவுளுக்கு நன்றி, நாங்கள் இப்போது ஒரு சுதந்திர நாடாக இருக்கிறோம். எங்களுக்கு அவர்களின்(வெளிநாடுகள்) உத்தரவுகளை வழங்கக்கூடாது. இது எங்கள் அமைப்பு, எங்களுக்கு எங்கள் சொந்த முடிவுகள் உள்ளன.

பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளை, குறிப்பாக இஸ்லாமிய நாடுகளை... ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மீதான அனைத்து தடைகளையும் விடுவிக்கவும், (மத்திய வங்கி) நிதியை விடுவிக்கவும் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

அண்டை நாடுகளுடன் நாங்கள் தலையிட மாட்டோம், அவர்கள் ஆப்கானிஸ்தானில் தலையிடக்கூடாது. நாட்டில் நடந்த பல தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருப்பதாகக் கூறிய இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழு, சட்டவிரோதமானது" என கூறினார்.

தலிபான் துணைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான சிராஜுதீன் ஹக்கானி கூறுகையில், "உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தையும் பெண்களுக்கு கல்வி வழங்கவும் கோரிக்கைகளை வைத்துள்ளன. இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்காது, சில காலம் எடுக்கும்" என கூறினார்.


Next Story