அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்; பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் கைது


அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்; பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் கைது
x
தினத்தந்தி 26 May 2022 7:23 AM IST (Updated: 26 May 2022 8:24 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் என்கிற பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 500க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இதனிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு விரைந்தனர்.

அவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர் இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீஸ் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றிய நபர் பள்ளிக்கூடம் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த 18 வயதான சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சம்பவம் நடந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், ரிச்சர்ட்சன் பகுதியில் உள்ள பெர்க்னர் உயர்நிலை பள்ளிக்கு மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் சென்றுள்ளான்.

இதனை கவனித்த சிலர் ரிச்சர்ட்சன் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். மாணவனிடம் துப்பாக்கி உள்ளது என்றும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, உடனடியாக போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையை நடத்தினர். இதில் சந்தேகத்திற்குரிய மாணவன் பெர்க்னர் உயர்நிலை பள்ளியில் படித்து வருபவன் என தெரிய வந்துள்ளது.

ஆனால், மாணவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. இதன்பின் ஈஸ்ட் ஸ்பிரிங் வேலி சாலை பகுதியில் நிறுத்தியிருந்த மாணவனின் வாகனத்தில் சோதனை செய்ததில், ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது.

ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி இல்லாத பள்ளி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த விதிமீறலுக்காக மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், மாணவரின் வயது உள்ளிட்டவற்றை முன்னிட்டு வேறு எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

கடந்த 2 நாட்களுக்கு முன் டெக்சாசில் பள்ளி ஒன்றில் ஆயுதமேந்திய 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்ட சூழலில், பள்ளி மாணவர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம் பற்றி அதிபர் பைடனும் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, பெர்க்னர் உயர்நிலை பள்ளி மற்றும் அருகில் உள்ள ஸ்பிரிங்ரிட்ஜ் பள்ளி கூடம் ஆகியவை அமைந்த பகுதியில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

1 More update

Next Story