ஆப்கானிஸ்தான் : ஹிஜாப் அணியாத இஸ்லாமிய பெண்கள் குறித்து தலீபான்கள் ஒட்டிய சுவரொட்டியால் பதற்றம்


ஆப்கானிஸ்தான் : ஹிஜாப் அணியாத இஸ்லாமிய பெண்கள் குறித்து தலீபான்கள் ஒட்டிய சுவரொட்டியால் பதற்றம்
x

Image Courtesy : AFP 

"விலங்குகளைப் போல தோற்றமளிக்க முயற்சிகிறார்கள்" என்று தலீபான்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். 1996-2001- ஆம் ஆண்டு வரையிலான தலீபான்கள் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றன. இதனால் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் சென்றதும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதிக்கக் கூடும் என ஆப்கன் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.

ஆனால், முந்தைய ஆட்சிமுறையை போன்று தங்களின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக தலீபான்களின் நடவடிக்கை அமைந்து வருகிறது.

குறிப்பாக தலீபான்கள் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். நாட்டில் பெண்கள் பொது வெளியில் செல்ல வேண்டியிருந்தால், அவர்கள் தங்கள் முகங்கள் உட்பட தங்களை முழுமையாக ஆடைகளால் மறைக்குமாறு ஏற்கனவே தலீபான்கள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் ஹிஜாப் அணியாத இஸ்லாமிய பெண்கள் குறித்து தலீபான்கள் ஒட்டிய சுவரொட்டியால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு ஆப்கானிஸ்தான் நகரமான கந்தஹார் முழுவதும் ஹிஜாப் அணியாத இஸ்லாமிய பெண்கள் "விலங்குகளைப் போல தோற்றமளிக்க முயற்சிகிறார்கள்" என்று தலீபான்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சுவரொட்டிகள் கந்தஹார் பகுதியில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்கள் போன்றவற்றிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் பேசிய கந்தஹார் அமைச்சகத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் தயேபி கூறுகையில், " நாங்கள் தான் இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம் மற்றும் முகத்தை மறைக்காத பெண்கள் குறித்து நாங்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவோம்" என அவர் தெரிவித்தார்.


Next Story