தபால் கொடுக்க சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி பலியான சோகம்...!


தபால் கொடுக்க சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி பலியான சோகம்...!
x
தினத்தந்தி 3 Aug 2023 10:41 AM GMT (Updated: 3 Aug 2023 11:46 AM GMT)

உஸ்பெகிஸ்தான் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தபால் கொடுக்கச்சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாஷ்கண்ட்,

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் லியோன்டிவாவை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். ஜூலை 24 ஆம் தேதியன்று லியோன்டிவா 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட்டில் ஏறியுள்ளார். எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. அதற்குள் சிக்கிய நிலையில், லியோன்டிவா கத்தி கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் வெளியில் இருந்து அவருக்கு உதவி கிடைக்கவில்லை.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட லியோன்டிவாவால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் லிப்டுக்கு உள்ளேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு 6 வயதில் மகள் உள்ளார். இது தொடர்பாக சீனாவை சேர்ந்த லிப்ட் நிறுவனத்தின் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனதை பதைபதைக்கும் வகையில் லிப்ட்டில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story